Tuesday, August 31, 2010

கனவுகள்










பகலில் காண்பதெல்லாம்
உடைதரித்த வேடம்

இரவில் வருவதெல்லாம்
நிர்வாண நிஜம்

கனவுகள் தின்ன தின்ன
நான் இளைக்கிறேன்

வாழ்வில் நிகழ்ந்து விட்ட
சோகமெல்லாம்
துண்டு துண்டாய்
ஊர்வலம் போகின்றன
என் தூக்கத்தில்

என்னைத் துளைத்தெடுத்த
பெண்ணெல்லாம்
ஊர்வலமாய்ப் போகின்றனர்
என் கனவில்
உதறி எழுகிறேன்

என்றோ நிகழ்ந்ததெல்லாம்
ஜீரணமின்றி
தலைசுற்ற
வெளித்தள்ளுகிறது
கனவு

லட்சியக் கனவு
என்பதெல்லாம் பொய்
கனவுகள் மட்டும் தான்
மெய்

இதயத்தின் மனசாட்சி
கனவாய்ப் போய்க்
குடியேறுகிறது

என் கனவுகள்
எப்பொழுதும்
என்னைத் துரத்தும்

நான் கண்மூடி
மரணித்து விட்டால்

என் துன்பத்திற்கு
யார் காரணமோ
அங்குப் போய் குடியேறும்

அவன்
தூக்கத்தைத்
தொலைத்தாவது
உயிர்வாழும்


Thursday, August 5, 2010

இறைவன் வந்தான்



                                                     இறைவன் வந்தான் 










ஒரு நாள்
இறைவன் வந்தான்
ஆகா என மகிழ்ந்து போனேன்
என்ன வேண்டும்? என்றேன்
உண்மையாய் இரு
உனக்கென்ன வேண்டும்? என்றான்.

பாரதியை போல்
பத்து பதினைந்து தென்னை
பத்தினிப்பெண்
என்றேன்
தந்தேன்
என்றான்
சென்றான்


இன்னொரு நாள் வந்தான்
மீண்டும் என்ன வேண்டும்?
என்றான்
தயங்கியபடி சொன்னேன்
கொஞ்சம் காசு பணம், பதவி
நிறைய கொடுத்துச் சென்றான்

ஏதோ சிந்தனையில் இருந்தேன்
என்ன ஆச்சரியம் அடடே
என் இறைவன் ‘நலமா எனக்கேட்டான்’
அழுவதைப் போல் சொன்னேன்
“என் பழைய வாழ்க்கை”

இன்னும் சிறிதுநாள் சென்றால்
இதுவும் உன் பழைய வாழ்க்கைதான்
இன்றே இன்பமாய் இரு
எனச்சொல்லிச் சிரித்து
காற்றில் கரைந்து போனான்

இதற்குப் பிறகு நானும்
அவனைத் தேடவில்லை
அவனும் என்னிடம் வரவில்லை.





வார்த்தை



                         










தெறித்த வார்த்தையில்
ஜனித்த வரலாறு ஏராளம்.

கூனியின் ஏளனம் இராமாயணம்
பாஞ்சாலியின் ஏளனம் மகாபாரதம்.

இந்த‘வார்த்தை’
நாயகனாய்
வலம் வந்ததை விட
வில்லனாய் திரிந்தது தான்
ஏராளம்.

சூடான வார்த்தைக்கு முன்னால்
உடன்படிக்கைகள்
ஊனமுற்ற குழந்தைகள்

தொண்டைக்குள் சிக்குவதெல்லாம்
அன்பின் வார்த்தைகள்
கொட்டித் தீர்ப்பதெல்லாம்
பிரிவின் அடையாளங்கள்

காற்றில் கரைந்து போகும்
இந்த வார்த்தைகள் தான்
சில நேரங்களில்
நெஞ்சு நின்று போகச்
செய்து விடுகிறது.
வார்த்தைகளின்றி
உன் நெஞ்சும்
என் நெஞ்சும்
பேசிக் கொண்டால்
உறவுகள் என்றுமே
சுகம் தான்.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...