நீ-என்
வகுப்பறைத் தோழி
ஆசையாய்த் தூண்டும்
அழகு நிலா
அடுத்த நாளே
உன் சிரிப்பையும்
நீ தீண்டாத
உன் தீண்டலையும்-எழுதி
கத்தையாய்
கவிதைகள்
கொடுத்தேன்
ரசிப்பாய் என
இருந்தேன்
சிரித்தாய்
ஒருமாலை
நேரத்தில்
முதலாளியிடம்
யாசகம்
கேட்கும்
ஒரு
தொழிலாளியைப் போல்
என் காதலைச்
சொன்னேன்
ஒரு தலையாட்டலில்
சரி என்றாய்
பிறகு
உறவு வேர்களும்
நட்புக் கிளைகளும்
வெட்டப்பட்ட
போன்சாய்
மரமானேன்
இன்னும்
சில நாட்களில்
மரபணு மாற்றப்பட்ட
பி.டி கத்தரிக்காய் ஆனேன்.
கடைசியாய்
ஒரு நாள்
நீ
என்ன செய்யப் போகிறாய்
என்றாய்
கவிஞன் என்றேன் நான்
சற்றே எரிச்சலுடன்
உன் தொழில்? என்றாய்
கவிதை என்றேன்
பிறகு
என்னை விட்டு
வெகுதூரம்
சென்று விட்டாய்
தனித்து விடப்பட்டோம்
நானும் என் கவிதையும்.
No comments:
Post a Comment